நவீன தீண்டாமையை தடுக்க நடவடிக்கை.. பல்கலை. சட்டத்தில் திருத்தம் செய்த தமிழக அரசு..

 
தமிழக அரசு

நவீன தீண்டாமையை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்கலைக்கழக  சட்டத்தில் திருத்தம் செய்து  அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளின் குறையை குறிப்பிடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இனி காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என மாணவர் சேர்க்கையில் பயன்படுத்தபடாது என்று பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள்

பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டாலே  போதும் என்றும்,  தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  பல்கலை சட்ட திருத்தம் மூலம் மாணவர் சேர்க்கையின்போதே மாற்றுத்திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிட்டே விண்ணப்பப்பதிவு மற்றும்  தேர்வுக்கான சலுகை கோருதலை இனி மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  பல்கலைக்கழகங்கள்,  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது மாற்றுத்திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.  தமிழகத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளின் செவித் திறன்களைப் பரிசோதிக்கும் வகையில், தமிழக அரசு மாவட்டந்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.