ஷிஹான் ஹுசைனிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி

வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி வில்வித்தை பயிற்சியாளர் டாக்டர் ஷிஹான் ஹுசைனி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நவீன வில்வித்தை வீரர்களை உருவாக்கி டாக்டர் ஷிஹான் ஹுசைனி அவர்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வில்வித்தைக்கு பெறும் பங்களிப்பு செய்து வருகிறார். இவர் 400க்கு மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், தமிழ்நாட்டில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து ரீகர்வ் வில் (1979) மற்றும் காம்பவுண்ட் வில் (1980) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நவீன வில்வித்தை பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைத்து, மேம்பாட்டிற்கான தரங்களை வடிவமைத்தார். இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். தற்போது ஹுசைனியின் நேரடி பயிற்சியின் கீழ் மொத்தம் 100 வில்வித்தை வீரர்கள் மற்றும் 300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.