தமிழகத்தில் 7 கோயில்களில் மருத்துவ மையம் : காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
தமிழகத்தில் உள்ள 7 திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்களை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
மக்கள் அதிகம் வரும் பிரசித்திபெற்ற 10 திருக்கோயில்களில் முதலுதவி சிகிச்சை மையங்கள், சுமார் ரூ. 10 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த மானியக் கோரிக்கையின் போது அறிவித்திருந்தார். அதன்படி முதல்கட்டமாக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில், திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை- அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மேல்மலையனூர்- அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், மருதமலை- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி- அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பழனி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகிய 7 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை இன்று (31.12 21 ) தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, சுற்றுலா மற்றும் பண்பாடு அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்..
மேலும் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் ஆர். அனிதா, அர். ராதாகிருஷ்ணன், ஆர். காந்தி, சா.மு. நாசர் மற்றும் தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம் ,ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருவள்ளூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.