மெகா தடுப்பூசி முகாம் திடீர் ரத்து : காரணம் இதுதானாம் !!
தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 7 வாரங்களாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம் ,பூங்காக்கள் ,வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நாளை நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுப் பிரியர்கள் , அசைவம் சாப்பிடுவோருக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் சனிக்கிழமைகளில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 7.64 கோடி பேரில், இதுவரை 5 கோடியே 92 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கும், 2வது தவணை தடுப்பூசி 31 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 8 வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற இருந்த நிலையில் கனமழை மற்றும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் ரத்தாகியுள்ளதாக தெரிகிறது. சுகாதார துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் தடுப்பூசி முகாம் நடத்தினால் விடுமுறையை ரத்து செய்துவிட்டு அவர்கள் வேலைக்கு வரும் சூழல் ஏற்படும் . அத்துடன் தீபாவளி பண்டிகை நாளில் விடுமுறை என்பதால் சிலர் கூப்பிட்டால் கூட தடுப்பூசி செலுத்த வர மாட்டார்கள். இதை கருத்தில் கொண்டு தடுப்பூசி முகாமை நாளை நடத்துவதற்கு பதில், அடுத்த வாரம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பூசி முகாம் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.