அடுத்த 2 நாட்களில் வெயில் 3டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் - வானிலை மையம்..
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இன்றும் நாளையும் (12.04.2023 முதல் 13.04.2023) தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், 12.04.2023 முதல் 16.04.2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.