பூந்தமல்லி - வடபழனி இடையே வரும் 15ம் தேதி 2ம் கட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
ஜனவரி 15ல் வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

விம்கோ நகர் பணிமனையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை (நீல வழித்தடம்), சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (பச்சை வழித்தடம்) என 2 வழித்தடங்களில் 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக மாதவரம் –சிறுசேரி சிப்காட் (ஊதா வழித்தடம்), பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையிலான (ஆரஞ்சு வழித்தடம்), மாதவரம் –சோழிங்கநல்லூர் (சிவப்பு வழித்தடம்) ஆகிய 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆரஞ்சு வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி இடையிலான ஒருபகுதி மெட்ரோ ரெயில் சேவையை விரைவாக தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆற்காடு ரோட்டை ஒட்டி செல்கிறது. இந்த வழித்தடத்தில் வரும் 15-ந்தேதி வாக்கில் சோதனை ஓட்டம் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது..
இதையொட்டி இரவு, பகலாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயர்மட்ட ஸ்லாப்கள் அமைக்கும் பணியில் 3 ஆயிரம் பேர், தண்டவாளம் அமைக்கும் பணியில் 600 பேர், சிக்னலிங் பணியில் 400 பேர் என முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 7 குழுக்களாக பிரிந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மெட்ரோ வழித்தடத்தில் 57 கிரேன்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ வழித்தடமானது டபுள் டெக்கர் வடிவில் செயல்படுத்தப்பட உள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையின் முதல் டபுள் டெக்கர் மெட்ரோ ரூட் என்ற பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


