"திடீரென விழுந்த கண்ணாடிகள்... குலுங்கிய கட்டடங்கள்” - கரூர், நாமக்கல்லில் நில அதிர்வால் மக்கள் அச்சம்!
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் மௌமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்தது என்பதால் கடலில் சுனாமி ஆழிப்பேரலைகள் உருவாக்கக் கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமி போன்று மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என அங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இச்சூழலில் தமிழ்நாட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் அதிர்ச்சி கலந்த பயத்துடன் கூறியுள்ளனர். கரூரில் ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, லைட் ஹவுஸ் கார்னர், கருப்புக்கவுண்டன் புதூர் பகுதிகளில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், கரூர் நகர பகுதியில் உள்ள உணவகத்தில் உள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மக்கள் மக்கள் வீடுகளை விட்டு அலறடித்து வெளியே வந்துள்ளனர்.
கரூருக்கு அண்டை மாவட்டமான நாமக்கல்லிலும் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இதேபோல் நாமக்கல்லில் திடீரென பலத்த சப்தத்துடன் கட்டடங்கள் குலுங்கியதாக மக்கள் கூறியுள்ளனர். பயங்கர சப்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதால் அச்சப்பட்டு சாலைகளில் தஞ்சமடைந்ததாகவும் சொல்லியுள்ளனர். கடந்த நவம்பர் 29ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாகக் கூறியிருந்தனர்.