நாகையில் மினி டைடல் பூங்கா..! டெண்டர் கோரியது தமிழக அரசு..
நாகையில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்ட ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
கல்லூரி படிப்புகளை முடித்து வெளியே வரும் இளைஞர்கள் பலருக்கும் ஐ.டி. வேலை என்பது ஒரு கனவாக இருந்து வருகிறது. அப்படி ஐ.டி. வேலைக்கும் செல்ல விரும்புபவர்கள் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனையடுத்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சிறிய நகரங்களில் டிட்கோ மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து தொழில்நுட்ப பூங்காக்களை (டைடல் பார்க்) நிறுவி வருகின்றனர். டைடல் பார்க் நிறுவனம் சார்பில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான (ஐ.டி.) உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் உள்ளிட்ட நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தவரிசையில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் நாகையில் மின் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்ட ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, நாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


