பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் - சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்

 
Anbil Magesh

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆனது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். 

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.  அதனைத்தொடர்ந்து  கடந்த 20ம் தேதி  2023 -24ம் நிதியாண்டிற்கான பொது  நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், 21ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நேற்று தொடங்கியது. 

இதனிடையே தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்து பேசியதாவது:- கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் குறைந்தபட்ச வருகைப் பதிவேடு 75% இருக்க வேண்டும் என்பதை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இனிமேல் கண்காணிக்கப்படுவார்கள். இடையில் நின்ற 1.90 லட்சம் மாணவர்களில் 78,000 பேரை தொடர்ந்து கண்காணித்து தேர்வு எழுத வைத்துள்ளோம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஏன் இவ்வளவு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வரவில்லை என முதல்-அமைச்சர் தொலைபேசி மூலம் என்னிடம் கேட்டார். பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு கூறினார்.