அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18.81 லட்சம் புதிய உறுப்பினர்கள் பதிவு - அமைச்சர் தகவல்
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து திராவிட மாடல் அரசு சாதனை
படைத்துள்ளதாக தொழிவாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளையும் வாழ்நிலையையும் உயர்த்துவதில் தனிக் கவனம் செலுத்திச் செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொறுப்பேற்ற பிறகுதான் முதன்முதலாக தனியே தொழிலாளர் நலத் துறையையும். தொழிலாளர் நல அமைச்சகமும் ஏற்படுத்தப்பட்டன.
தொழிகாளர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த உதவியாக 1971ஆம் ஆண்டு தொழிலாளர் நலவாரியத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார் கலைஞர். அவ்வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பிறகு இந்தத் திராவிட மாடல் அரசு தொழிலாளர்கள் நலனில் அக்கறைக் கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் உயர்த்துவதற்காகக் கடந்த மூன்றரை ஆண்டுகளில், 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவுப்பெற்றுள்ள 25,35,546 உறுப்பினர்களுக்கு 2.106 கோடி ரூபாய் வரையிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருத்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கினர் முதலமைச்சர் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காகச் சிரத்தையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசு அவர்களின் உரிமைகளைக் காப்பதிலும் அவர்களுக்கான நலத்திட்டங்களை வகுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு தோழனாய் பாதுகாவலனாய் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ள்ளார்.


