"நீட் தேர்வை எதிர்க்க அதிமுகவுக்கு தைரியமில்லை... போராட்டம் நடத்துறாங்களாம்" - துரைமுருகன் காட்டம்!

 
duraimurugan

அதிமுக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது முல்லை பெரியாறு அணை. இந்த அணையில் அதிக பட்சமாக 142 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 142 அடியிலேயே நீர் தேக்கப்பட்டு வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீரை தேக்க கூடாது என பிரச்சனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

duraimurugan

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் எட்டுவதற்கு முன்பே கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நீர் வளத்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள மக்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு, கேரள அரசுக்கு துணைபோகி இருப்பதாகவும் தமிழகத்திற்காக ஜெயலலிதா பெற்றுத்தந்த உரிமையை துரைமுருகன் தாரை வார்த்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  திமுக அரசை கண்டித்து வரும் 9-ம் தேதி 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவம் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலவரம் குறித்து ஆய்வு செய்யவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மதுரை புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வடகிழக்கு பருவ மழை காரணத்தால் அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது அந்த வகையில் முல்லை பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்யப் போகிறேன். அணை பற்றி பல வதந்திகள் உலா வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்யாமல் அதிமுக போராட்டம் அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று கூறினார். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தைரியமில்லாத அதிமுக, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக போராட்டம் நடத்துவதா? என்றும் கேள்வி எழுப்பினார்.