"அது தமிழ்நாட்டின் இடம்.. அவர்களால் அணை கட்ட முடியாது" - அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க இன்று அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்லவிருக்கிறார். மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக அரசு ஜூன் மாதம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க கர்நாடக அரசை காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் . ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். அது தமிழ்நாட்டின் இடம்.. அவர்களால் அணை கட்ட முடியாது. மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம் என்றார்.