எக்காலத்திலும் மேகதாது அணையை கட்ட விட மாட்டோம் - அமைச்சர் துரைமுருகன் அதிரடி

 
duraimurugan

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் ஆலோசனை நடத்தினார்.  மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேகதாது அணை - ஒகேனக்கல்

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடகாவின் ஆசை மட்டுமே. ஆனால் அவர்களுக்கு உரிமை இல்லை. மேகதாது அணை கட்டக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை உள்ளது.  மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். பல விஷயங்கள் இருக்கின்றன. அரசியல் களத்தில் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பார்கள். நாங்கள் கட்டவே விட மாட்டோம் என்போம். எக்காலத்திலும் மேகதாது அணையை கட்ட விட மாட்டோம். இவ்வாறு கூறினார்.