அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை - அமைச்சர் கே.என்.நேரு

 
kn nehru

அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக அம்மா உணவகங்கள் சரியாக இயங்குவதில்லை எனவும், அங்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்குவதில்லை எனவும், உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர் என்றும் கூறினார். 

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை. அம்மா உணவகத்தை எந்த இடத்திலும் மூடவில்லை. அம்மா உணவகத்தை மூட முதலமைச்சரும் சொல்லவில்லை. அம்மா உணவகங்களை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. அம்மா உணவகத்திற்கு கடந்த ஆட்சியை விட அதிகமாக நிதி ஒதுக்கி வருகிறோம். இந்த ஆண்டு ரூ.129 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம் என்றார். இதனிடையே இந்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், எந்த அம்மா உணவகத்தில் உணவு தரம் இல்லை என குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்காவது தவறுகள் நடக்கலாம், எந்த இடத்தில் என்பதை தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.