மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு - அமைச்சர்

 
Ma Subramanian

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 
 
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ பரவி வருகிறது. இது ஒருசிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த வீடியோ உண்மை கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூர், மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். அவர்கள் அதிக அளவில் தமிழகத்தை விட்டு வெளியேறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்தது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டது. 

North indians

இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். முதல் அமைச்சரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமையில் உள்ளனர். பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்