“பைபாஸ் சர்ஜரியை நேரு ஸ்டேடியத்தில் செய்வார்களா?” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்தா அறுவை சிகிச்சை செய்ய முடியும்?” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது கோடம்பாக்கம் புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர்கட்சியினர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் தீவிரம் அவர்களுக்கு தெரியக்கூடும். வெளிப்படை தன்மையுடன் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனில் , நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் வைத்தா செய்ய முடியும் என்று காட்டமாக பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நம்மை காக்கும் 48 திட்டத்தின் காரணமாக சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.67 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் , வரும் நாட்களில் உயிர் இழப்புகள் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.140 கோடி இதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் ஏற்கனவே நிதி கொடுத்துள்ளார். தமிழ் இருக்கை அமைக்கும் பணிகளில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்றார்.