ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட குழந்தையின் கை அழுகியதா?- அமைச்சர் மா.சு. விளக்கம்
ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க 3 மருத்துவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவரின் ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வழிந்தததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் டிரிப்ஸ் போட்டுள்ளனர். உடனே டிரிப்ஸ் போட்ட இடத்தில் கை கறுப்பாக மாறி, வலது கை முட்டி பகுதி வரை செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகிய விவகாரம் விஸ்வரூபமாக குழந்தைக்கு வலது கை அகற்றப்பட்டு, அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் புகார் கூறும் நிலையில், குழந்தையின் உடல் நலத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரித்தேன். ஏற்கனவே குறை பிரசவத்தில் பிறந்தததால் குழந்தைக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. சிகிச்சையின்போடு கவனக்குறைவு இருந்ததா என்பதை விசாரிக்க மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.