மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2028ம் ஆண்டு நிறைவடையும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma Subramanian

வருகிற 2028ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது.  வருகிற 2028ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்போதைய அதிமுக அரசு அதனை செய்யவில்லை என கூறினார். 

masu

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அதிகப்படியான ரத்த வங்கிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். விரைவில் தமிழகம் ரத்த தானம் செய்வதில் முதல் இடத்திற்கு வரும். இவ்வாறு கூறினார்.