மருத்துவம் பார்ப்பதற்காக பலரும் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்- அமைச்சர் மா.சு.
வெளிநாட்டில் இருந்து மருத்துவம் பார்க்க வருபவர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு மட்டும் வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தரமணியில் புதிதாக கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவிலும், நம் தமிழக மாநிலத்திலும் இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு சென்று மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது. பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போது தமிழகத்தற்கு மருத்துவத்திற்கு வரும் அளவுக்கு நிலை மாறியிருக்கிறது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் வெளிநாட்டிலிருந்து மருத்துவத்துக்காக வருபவர்கள் 25 சதவீதம் பேர் தமிழகத்துக்கு தான் வருகிறார்கள். இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டத்தின் மூலம் 3 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது.
மக்களை தேடி மருத்துவம் 2 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளது. மருத்துவமனைகளின் தரமும் மருத்துவ கட்டமைப்பின் தரமும் உயர்ந்து உள்ளது. தனியார் மருத்துவமனையும் இன்று மிக பெரிய மருத்துவ புரட்சிகளை செய்து வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலதிலும் இல்லாத அளவில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. 2 கோடி குடும்பங்களை சென்று சேர்ந்துள்ள திட்டம் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்” என்றார்.


