நான் உடந்தை என்று யார் நிரூபித்தாலும் பொது வாழ்க்கையை விட்டு விலகத் தயார் - அமைச்சர் மனோ தங்கராஜ்..!

 
1

கனிம வள பிரச்சனையில் நான் உடந்தை என்று பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல யார் நிரூபித்தாலும் நான் பொது வாழ்க்கையை விட்டே விலகி விடுகிறேன் என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் உள்ள விஜய் வசந்த் எம்பி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்தில் 39 கல்குவாரிகள் இயங்கி வந்தது. தற்போது 6 குவாரிகள் உள்ளது. இந்த 6 குவாரிகளும் ஹைகோர்ட் உத்தரவின் படி இயங்கக்கூடியதாகும். தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. 

கனிம வளம் தொடர்பாக ஒரு வழக்கில் ஐகோர்ட்டு தெரிவித்துள்ள கருத்துக்களை உங்களிடம் தெரிவிக்கிறேன். அதாவது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லும் கனிம வளங்களை தடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளது. அதேபோல் மத்திய அரசின் மைன்ஸ் அண்ட் மினரல்ஸ் டிரான்ஸ்போர்ட் சட்டம் மத்திய அரசின் கையில் உள்ளது. இது தொடர்பான வழக்கில் மாநில அரசுதான் மேல்முறையீடு செய்து வழக்கை நடத்தி வருகிறோம். திமுக சார்பில் தான் பொதுநல வழக்கு போட்டு வாதாடி வருகிறோம். பொன் ராதாகிருஷ்ணனோ, நாம் தமிழர் கட்சியினரோ பொதுநல வழக்கு போட்டு உள்ளார்களா? இல்லையே. இந்த வழக்கில் கூட தன்னை இணைத்துக் கொள்ளாத பொன் ராதாகிருஷ்ணன் கபட நாடகம் ஆடுகிறார். நான் ஏற்கனவே சவால் விட்டு இருக்கிறேன். கனிம வள பிரச்சனையில் நான் உடந்தை என்று பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல யார் நிரூபித்தாலும் நான் பொது வாழ்க்கையை விட்டே விலகி விடுகிறேன். என்று கூறினார். பேட்டியின் போது விஜய் வசந்த் எம் பி, மேயர் மகேஷ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.