தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

 
mano

தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை எனவும், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

கன்னியாகுமரியில் இன்று தமிழக பாலவளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன். தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகதரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம்.  

ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.