"புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார்" - அமைச்சர் பொன்முடி
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலை 37வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி , "இந்தியை கட்டாயமாக்கக்கூடாது, மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகம் இருந்தது . ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியிருப்பதுதான் திராவிடன் மாடல், பெரியார் மண்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை. தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்க தயாராக உள்ளனர். புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார். தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன். நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல . இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பார்கள். இன்று கோவையில் பானிபூரி கடை நடத்துபர்கள் யார்? " என்று கேள்வி எழுப்பினார்.