செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பணம் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டு, 2023 ஜூன் 14 அன்று அவரை கைது செய்தது. கைது நேரத்தில் அவர் திமுக அமைச்சராக இருந்தார். அமலாக்கத் துறை, "அவரைப் பதவியில் தொடர விடக்கூடாது" என உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியது. பின்பு, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, நீண்ட கால சிறை வாழ்கையின் பின்னர், 2024 செப்டம்பர் 26-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. சில நாள்களில் மின்துறை அமைச்சர் பதவியையும் மீண்டும் ஏற்றார். செந்தில் பாலாஜி மீண்டும் பதவியேற்றதால் சாட்சிகள் பாதிக்கப்படக் கூடும் எனும் ஆபத்தைக் காட்டி, பாதிக்கப்பட்டர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், "அமைச்சர் பதவியா? ஜாமீனா?" என அவர் ஒன்று தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஏப்ரல் 28 வரை அவகாசம் அளித்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக இருந்தது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நிலையில் ரகுபதி தாக்கல் செய்தார். சட்டப்பேரவையின் இறுதி நாளன்றுதான் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டமாகும்.


