"சிதம்பரம் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசனை" - அமைச்சர் தகவல்
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு எதிராக பல்வேறு புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் ஏறி வழிபட பொதுமக்களுக்கு 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் தடை விதித்து தீட்சிதர்கள் பலகை வைத்தனர் . இதை கண்ட பக்தர்கள் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயல்படுவதாக கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பதாகையை அகற்ற கோவிலுக்குள் சென்றனர். காவல்துறை சார்பில் சரியான பாதுகாப்பு இல்லாததால் கோயில் தீட்சிதர்கள் செயல் அலுவலரின் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 26 ஆம் தேதி கோவில் தரிசன விழா முடிந்த பிறகு மாலையில் கடலூர் மாவட்ட இந்து சமய இந்து அறநிலையத்துறை துணை ஆணைய சந்திரன், சிதம்பரம் உதவி ஆட்சியர் பூமா, எஸ். பி. ரகுபதி மற்றும் இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் கொண்ட குழு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடியாக கனக சபையில் தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் கனக சபையின் கதவை மூடி வைத்தனர். இது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிதம்பரம் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசித்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் . சிதம்பரம் கோயிலில் அதிகார மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர். இதனால் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று விளக்கமளித்தார்.