இதுவரை 87.44% பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர் - அமைச்சர் தகவல்

 
senthil balaji

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திடுமாறு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதத்துடன் இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஜனவரி 31ம் தேதி வரை அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நாளையுடன் இந்த அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், இன்னும் பலர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். 

eb and aadhar

இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன். இவ்வாறு  அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.