#Breaking அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை
செந்தில் பாலாஜி உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை முதல் பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றது. இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரகுராம் தலைமையிலான ஆறு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதை தொடர்ந்து 5 மணிநேரத்திற்கு பிறகாக செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு இன்று காலை முதுநிலை ஆலோசகர் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் மற்றும் அவரது குழுவினரால் இதய துடிப்பு, இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டு கரோனரி ரிவாஸ்குலரைசேஷன் நிறுவப்பட்டது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய இதயத் தீவிர சிகிச்சைப் பிரிவில் பலதரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.