அரசு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

 
udhai

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் இன்று அரசு பள்ளி மாணவர்களுடன் வரிசையில் அமர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். 

தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை அமைச்சர் உதயநிதி அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார். இதற்காக அவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி குறித்து ஆய்வு செய்தார். அப்போது அங்கு உணவு அருந்தும் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். 



 
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, உடல்நலத்துடன் கூடிய கல்வியை உறுதி செய்ய, நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வரும் கனவு திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து,  திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம். அங்கு வழங்கப்படும் உணவை மாணவச் செல்வங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட போது, பள்ளியிலேயே வழங்கப்படும் காலை உணவு சிறப்பாக இருக்கிறது என மாணவர்கள் கூறியது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது. பசி நீக்கி அறிவு புகட்டும் இத்திட்டம் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.