100 தாழ்தள பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி..
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக இயக்கப்படும் தாழ்தளப் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப புதிய பேருந்துகள் இயக்குவதில் போக்குவரத்து கழகம் தொடர் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி 100 புதிய தாழ்தள பேருந்துகளை சென்னை போக்குவரத்து கழகத்தில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியை செய்து தொடங்கி வைத்திருக்கிறார். ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய வழித்தடங்களில் பல வகையிலான பேருந்துகள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் தற்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்படுத்த ஏதுவாக தாழ்தள பேருந்துகள் புதிதாக 88 தாழ்தள பேருந்துகளும், 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் என மொத்தம் 100 பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை பல்லவன் இல்லம் மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளில் பயணிகள் எளிதாக ஏறவும் இறங்கவும் உதவும் வகையில் தாழ்வான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பேருந்துகளிலும் 35 இருக்கைகளுடன் 75 பயணிகள் மொத்தமாக பயணிக்கும் வகையிலும், பிஎஸ் 6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் சாலைகளில் மேடு பள்ளங்களில் சென்றால் கூட பயணிகளுக்கு எந்தவித அதிர்வுகளும் ஏற்படாத வகையில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த பேருந்துகளில் உள்ளன.

ஏற்கனவே இருக்கக்கூடிய தி.நகர், திருப்போரூர், பாரிமுனை, கிளாம்பாக்கம் - கோயம்பேடு, தாம்பரம் - ஆவடி, தாம்பரம் - மாமல்லபுரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக கடந்த 6 ஆண்டுகளாக புதிதாக தாழ்தள பேருந்துகளின் சேவை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது புதிதாக 100 தள பேருந்துகளையும் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


