அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

 
Udhayanidhi

அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக வெள்ள பாதிப்பு குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது தமிழக முதல்வர் எங்கு இருந்தார். டெல்லியில் இருந்த போது போகிற போக்கில் பிரதமரை சந்தித்தார்.  பேரிடர் நடக்கும் போது கூட முதல்வர் டெல்லியில் இருந்தது ஏன். தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. மத்திய அரசு நிதி வழங்குவது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உங்க அப்பன் வீட்டு சொத்தா என கேட்கிறார். அவருக்கு நாவடக்கம் தேவை. இது ஒன்றும் அவுங்க அப்பா வீட்டு சொத்து இல்லை. இவ்வாறு கூறினார்.

இந்த நிலையில், அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதியை மட்டும்தான் கேட்டேன். யாரை பற்றியும் தவறாக பேசவில்லை. அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? பேரிடர் கால நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் அரசியலாக்க முயற்சிக்கிறார். உன் தவறு, என் தவறு என குற்றச்சாட்டுகளை கூறி எதையும் அரசியலாக்க விரும்பவில்லை. புயல், வெள்ள பாதிப்பை உணர்ந்து தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும். ஒன்பதரை ஆண்டு மோடி ஆட்சியே பேரிடர் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் முழு வீச்சில் மீட்பு, நிவாரணப்பணிகள் நடைபெறுகிறது. வெள்ளத்தால் ஏரல் பேரூராட்சி அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.