"தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் முதல்வர் எங்களை வளர்த்துள்ளார்" - அமைச்சர் உதயநிதி
மாமன்னன் திரைப்படம் தொடர்பான இயக்குநர் பா.ரஞ்சித்தின் விமர்சனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையுலகை சேர்ந்த பலரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித், “மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், "இயக்குநர் ரஞ்சித் முன்வைத்த விமர்சனத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறேன், யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தவறு எங்கு நடந்தாலும் தவறுதான். அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் எங்களை வளர்த்திருக்கிறார்கள். தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் முதல்வர் ஸ்டாலின் எங்களை வளர்த்துள்ளார்" என்றார்.