தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை!

 
udhayanidhi stalin

தியாகி இமானுவேல் சேகரனின் 66-ஆவது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான  இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், தியாகி இமானுவேல் சேகரனின் 66-ஆவது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், சுதந்திர போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட -  விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆவது நினைவு நாள் இன்று. அதனையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி சக அமைச்சர் பெருமக்கள் -  நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம்.  சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமத்துவம் படைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இமானுவேல் சேகரன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.