"தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது" - அமைச்சர் சேகர்பாபு
தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து தருமபுரம் ஆதீன மடத்திற்கு சென்ற அவருக்கு அங்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தருமபுர ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற அவர், 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "பழமையான ஆதீனங்கள் தமிழ் மற்றும் சைவத்தை வளர்த்து வருகின்றன. ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்து அறநிலையதுறை தலையிடாது . தீட்சிதர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், பக்தர்கள் தரிசனம் தொடர்பாக புகார்கள் ஏராளமானவை தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே கடிதம் அனுப்பியுள்ளோம். தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது. சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும் என நாங்கள் எங்கும் கூறவில்லை" என்றார்.