‘ஓரணியில் தமிழ்நாடு’ 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக சேர்க்கனும் - மு.க.ஸ்டாலின்..
ஓரணியில் தமிழ்நாடு எனும் புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம் குறித்து திமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் "ஓரணியில் தமிழ்நாடு" எனும் சிறப்பு தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்துள்ளார். நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. "ஓரணியில் தமிழ்நாடு" என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினராக பதிவு செய்வதற்கான முயற்சியாகும்.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ ‘எல்லாருக்கும் எல்லாம்’ எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளை காத்திடும் பொருட்டு “ஓரணியில் தமிழ்நாடு” என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. திமுக சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30சதவீத வாக்காளர்களை திமுகவின் உறுப்பினர்களாக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாகச் சென்று அரசி திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி- நகர- ஒன்றிய-பேரூர்-வட்ட- கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்படுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும்.
அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாக கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது” என்று அவர் கூறினார்.
மேலும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்த தீர்மானத்தில், “ தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களிடமும் (2 கோடி குடும்பங்கள்) இப்பிரச்சாரத்தை கொண்டு சென்று அதில் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒரே தமிழ்நாடு அணியில் (ஓரணி) இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது "ஓரணியில் தமிழ்நாடு" பிரச்சார இயக்கம்.

இப்பிரச்சாரம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு எனும் செயலியின் மூலம் செயல்படுத்தப்படும். இயக்கத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை அழைத்து தங்கள் ஆதரவை தெரிவித்து இணைந்துகொள்ளலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கும் உறுப்பினராக இணைய இந்த செயலி வழிவகுக்கும். தமிழ்நாடு மற்றும் திராவிட மாடலின் பெருமையை வலியுறுத்தும் பிரச்சார இயக்கம். ஒன்றிய அரசின் மாநில உரிமைகளை பறிக்கும் திட்டங்கள், மொழித் திணிப்பு ஆகிய சவால்களுக்கு எதிராக பண்பாடு மற்றும் அரசியல் தளத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான அழைப்பே இப்பிரச்சார இயக்கம்.
அரசியல் மற்றும் பண்பாட்டு அழுத்தங்களால் தமிழ்நாடு சூழப்படும்போதெல்லாம் "ஓரணியில் தமிழ்நாடு" ஒற்றுமை, சுயமரியாதை மற்றும் மாநிலத்தின் கூட்டாட்சி உரிமைகளை வலியுறுத்தும். மாநிலத்தின் உரிமைக் குரல்களை முடக்கவும் வலிமை இழக்கவும் ஒன்றியம் செய்யும் முயற்சிகளுக்கு இப்பிரச்சார இயக்கம் நேரடி பதிலாக அமைவதோடு மக்களாட்சியில் திமுகவின் உறுதியான பங்களிப்பையும் வெளிப்படுத்தும். இந்த பிரச்சார இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு சொல்லும் செய்தி ஒன்றுதான்.
“அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.
ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!”” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


