இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் சாரதா மேனன் காலமானார் - மு.க.ஸ்டாலின் இரங்கல்...

 
சாரதா மேனன்

பத்ம பூசண் விருது பெற்றவரும், இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவருமான சாரதா  மேனன்(98) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 

கர்நாடக மாநிலம் மங்களூருவில்,  1923ஆம் ஆண்டு பிறந்தவர் சாரதா மேனன். தந்தையின் பணி நிமித்தம் காரணமாக சிறுவயதிலேயே இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது.இங்கேயே  பள்ளி படிப்பை முடித்த அவர், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் தனது  மருத்துவப் படிப்பை முடித்து, தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் மருத்துவ மையத்தில் மனநல மருத்துவ படிப்பை முடித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

சாரதா மேனன்

இந்நிலையில் , மருத்துவர் சாரதா மேனன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று  (திங்கள் கிழமை) மாலை 4 மணியளவில் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு தமிழக முதவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

” இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் தனது உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருத்தத்திற்குள்ளானேன்.  சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயின்ற அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

மருத்துவர் சாரதா மேனன்

மனநோயாளிகளின் சிகிச்சையில்,  அவர்களுக்கு மறுவாழ்வு  அளிப்பதில் தனிமுத்திரை படைத்த சாதனையாளர்.  அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர்.  சென்னையில் அவர் நிறுவி இயங்கிவரும் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் (SCARF) அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  அவரது சேவையை பாராட்டி இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சிறந்த மருத்துவ சேவைக்காக தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற சாரதா மேனன் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் மருத்துவத் துறையில் இருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் இரங்கல்