சிறுமி இசக்கியம்மாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி!!
பிளீச்சிங் பவுடரை தவறுதலாக உண்டதால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்கு பின் நலமாக உள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் கே சி ரோடு குடிநீர் தொட்டி கீழ்ப்புறம் பகுதியை சேர்ந்த சீதாராஜ் என்பவரின் 5 வயது மகள் இசக்கியம்மாள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என்று நினைத்து சாப்பிட்டு விட்டார். இதையடுத்து சிறுமியின் உடல் மோசமடைந்தது. இதுகுறித்து செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அலுவலர் ராஜேஷ் கண்ணனுக்கு தெரிய வந்ததை அடுத்து, சிறுமி மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக உத்தரவின் பேரில் சிறுமி, சென்னை வரவழைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில், செங்கோட்டை சேர்ந்த சிறுமி இசக்கியம்மாள் , பெற்றோர் சீதாராஜ் மற்றும் பிரேமா ஆகியோருடன் ஆகியோர் சந்தித்து தனது மகள் துணி வெளுப்பதற்கு உபயோகிக்கும் ரசாயன திரவத்தை தவறுதலாக குடித்ததால் , உணவுக்குழாய் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதை அறிந்து, தமிழக முதல்வர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது உடல் நலம் தேறி வருவதற்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது தமிழக முதல்வர் சிறுமி இசக்கியம்மாள் தொடர் சிகிச்சைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.