முத்துராமலிங்க தேவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி இதுதான் - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!!

 
ttn

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

ttn

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது ,சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்கு ஆகவே,  தவிர எனக்காக அல்ல என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார்.  தனது தேகத்தையே தேசத்துக்காக படைத்தவர் அவர். மனிதனை உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர,  சாதியால் அல்ல என்று சாதி, ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார் அனைவருக்குமான தலைவர் அவர்.

பக்குவப்பட்ட ஒருவன் இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும், கிறிஸ்துவ வளாகத்தில் வைக்கின்ற மெழுகுவர்த்தி ஒளியையும் ,முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற தன் உடலின் இருட்டை போக்க எழுப்பவேண்டிய ஞான விளக்கின் வடிவமாக காண்பான் என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர். 

ttn

தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள்;  கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என்று சொன்ன தத்துவஞானி.  நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும் , அதே நேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக்கொடுக்கும் பொறுமை குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை. முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ் என்று முழங்கிய தமிழ் ஆளுமை. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முன்மொழிந்த இந்த முத்து மொழிகளை பின்பற்றி நடப்பது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. வாழ்க அவரது புகழ் வெல்க அவரது சிந்தனைகள் " என்று போற்றியுள்ளார்.