நாளை ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! மலர் கண்காட்சியை தொடங்கிவைக்கிறார்
நாளை ஊட்டி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், ஆண்டுதோறும் கோடை விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மலர்கண்காட்சி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 127வது மலர்கண்காட்சி இம்மாதம், 16ம் தேதி முதல், 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. இ-பாஸ் நடைமுறையால், வாகன கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் உள்ள, சுற்றுலா பயணியர் அனைவரும் மலர் கண்காட்சியை ரசிக்கும் வகையில், இம்மாதம், 15ம் தேதி துவங்கி, 25-ம் தேதி வரை, கண்காட்சி நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 15ம் தேதி ஊட்டி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை வழியாக ஊட்டி செல்கிறார். 15ம் தேதி ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைக்கும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இதன்படி, பொதுமக்கள் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்குகிறார். இதைத் தவிர்த்து தொட்ட பெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றுகிறார். இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் 16 அல்லது 17ம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


