பருவமழை- கால்வாய்களை தூர்வார முதல்வர் உத்தரவு
தென்மேற்கு பருவமழை, மேட்டூர் அணை நீர் திறப்பு மற்றும் குறுவை சாகுபடி பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தெற்கு கேரளாவில் வரும் 27ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ல் ஜூன் 7-ம் தேதியும், கடந்த 2024-ல் மே 30-ம் தேதியும் பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு அதைவிட 4 நாட்கள் முன்னதாக தொடங்க உள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை, மேட்டூர் அணை நீர் திறப்பு மற்றும் குறுவை சாகுபடி பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வ வேலு, பேரிடர் மேலாண் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு, மின்சார மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் தலைவர் டிஜிபி சங்கர் ஜீவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கேரளா ஓட்டியுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், கால்வாய்களை தூர்வாரும் பணிகள், கடைமடை வரை நீர் சென்று சேருவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவகாலம்தான் அதிக மழை தரும் பருவம். இந்த காலகட்டத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை கிடைக்கும். கடந்த ஆண்டில், ஓரளவு இதற்கு இணையாக தென்மேற்கு பருவமழை காலத்திலேயே தமிழகத்துக்கு மழை கிடைத்தது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவகாலத்தில் வழக்கமாக 32 செ.மீ. மழை கிடைக்கும். கடந்த ஆண்டு 39 செ.மீ. மழை கிடைத்தது. சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை பொய்க்கும்போது, தென்மேற்கு பருவமழைதான் தமிழக மக்களுக்கு பேருதவியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


