திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜான் பிரிட்டோ அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருட்தந்தை முனைவர் திரு. ஜான் பிரிட்டோ அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன். தாவரவியல் வல்லுநரான அருட்தந்தை திரு. ஜாண் பிரிட்டோ அவர்கள், ஏழை, எளிய மாணவர்கள் பலரும் உயர்கல்வி பெற உதவி அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உறுதுணையாக இருந்துள்ளார்.
அவரது பிரிவால் வாடும் ஜெயிண்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.