"மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போல பறித்துக் கொள்கிறார்" - செல்வப்பெருந்தகை எம்எல்ஏ

 
tn

மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போல பறித்துக் கொள்ளப் பார்க்கிறார் என்பதே ஆளுநரின் செயல் உணர்த்துகிறது என்று எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

rn ravi

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஓப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிய 10 மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை வேண்டுமென்றே, காலம் தாழ்த்தும் நோக்கத்தில் ஆளுநரின் இந்த செயல் அவரின் ஆணவ, அராஜகப் போக்கைக் காட்டுகிறது. ஆளுநர் இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கோ, அவர் சார்ந்த கட்சிக்கோ எதிரானது அல்ல. அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிரானது. மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போல பறித்துக் கொள்ளப் பார்க்கிறார் என்பதே ஆளுநரின் செயல் உணர்த்துகிறது.

rn ravi

இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 159-இன்படி, ஆளுநர் எடுத்த பிரமாணத்தின் வாக்கியங்களில் உள்ள உறுதிமொழியானது, இந்திய அரசமைப்புச்சட்டத்தை பாதுகாப்பது என்பதாகும். ஆளுநர்களின் பணிக்காலத்தில் மக்கள் நலனுக்குரிய கடமைகளைச் செய்து, மாநில மக்களின் நல்வாழ்வுக்குரிய பணி செய்தல் அவசியமாகும். ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநராக பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை தமிழ்நாட்டின் மக்களின் நலனுக்கும், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் புரியும்.


மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு, மக்களாட்சிக்கு பதிலாக, எதிர்விளைவுகளில் ஈடுபடுவது ஜனநாயக விரோதமாகும். அரசமைப்பு சட்ட மாண்பினை வேண்டுமென்றே மீறி செயல்படுவது குற்றம் என்பதை ஆளுநர் உணரவேண்டும். அதைவிடுத்து ஒன்றிய அரசின் முகத்தை தமிழ்நாட்டில் பிரதிபலிக்கும் கண்ணடியாக ஆளுநர் அரசியல்வாதி போல செயல்படுவது போட்டி அரசாங்கம் என்ற ஆபத்தை உருவாக்கி விடும் என்பதை ஆளுநர் உணரவேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.