ஃபைனான்சியரை ஏமாற்றி 550 சவரன் நகைகளை அபேஸ் செய்த மாடல் அழகி.. சிக்கிய புல்லட் காதலன்..
சென்னை அருகே பூந்தமல்லியில் சொந்த வீட்டில் 550 சவரன் நகை திருடிய வழக்கில், மாடல் அழகியின் புல்லட் காதலனிடம் இருந்து 2 பைக்குகள், 100 கிராம் நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பூந்தமல்லியைச் சேர்ந்த ஃபைனான்சியர் சேகர் (47). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு சேகர் மாடல் அழகியான சுவாதி(22) என்கிற பெண்ணுடன் பழக்கம் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தனது சொந்த வீட்டிலேயே மனைவி, தாய் மற்றும் தம்பி மனைவி ஆகியோருக்கு சொந்தமான 550 சவரன் நகைகளை திருடி தனது காதலிக்கு பரிசாக கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சேகரின் மனைவி திடீரென வீட்டிற்கு வந்து பீரோவில் வைத்திருந்த நகைகளை தேடிப்பார்த்த போதே, வீட்டிலிருந்த அனைவரது நகைகளும் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து, சேகரின் குடும்பத்தினர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர் மற்றும் ஸ்வாதி ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஸ்வாதியை 5 நாட்களும், சேகரை 3 நாட்களும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, சேகர் கொடுத்த நகைகளை எல்லாம் விற்று ஸ்டார் ஓட்டலில் மது அருந்தியதாகவும், சேகர் கொடுத்த 3 கார்களை தனது ஆண் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டதாகவும், அந்த டுகாட்டி பைக்கையும் இளம்காதலுனுக்கு கிஃப்ட்டாக கொடுத்துவிட்டதாகவும் சுவாதி விசாரணையின் போது தெரிவித்தார். அத்துடன் தன்னை நிர்வாணப்படுத்தி சேகர் நகைகளை போட்டு அழகு பார்ப்பார் என்றும் தெரிவித்தார். என்னுடன் ஜாலியாக பொழுதைக் கழித்த மகிழ்ச்சியில் சேகர் எனக்கு கொடுத்த கட்டணம் மற்றும் பரிசை திருப்பிக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், சேகர் கொடுத்த பணம், நகை எல்லாம் செலவாகி விட்டதாகவும் சுவாதி கூறினார்.
இந்நிலையில் சுவாதியின் இளம் புல்லட் காதலனை பிடித்து விசாரித்ததில், இருவரும் திட்டமிட்டே சேகரை வலையில் வீழ்த்தி பணம் நகைகளை அபேஸ் செய்தது தெரியவந்திருக்கிறது. சுவாதி சேகரிடம் இருந்து கொண்டு வரும் நகைகள் அனைத்தையும் , இந்த புல்லட் காதலன் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் வைத்து , பணம் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். அத்துடன் அந்த புல்லட் காதலன் சுவாதி கொடுக்கும் பணத்தை வைத்து, தனது 3 இளம் காதலிக்கும் செலவழித்து வந்துள்ளார். இதனையடுத்து, முதல்கட்டமாக அவனிடம் இருந்து 100 கிராம் தங்க நகைகளையும், ரூ. 10 லட்சம் மதிப்பிலான டுகாட்டி பைக் உள்ளிட்ட 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி உள்ளனர்.