மார்ச் 4ல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்..
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால் இன்று முதல் மார்ச் 4ம் தேதியும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “மார்ச் 2, 3,5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மார்ச் 4ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது. அத்துடன் வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையில், மார்ச் 4, 5ல் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும், அப்போது மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு மார்ச் 4, 5ல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.