நவீன முறையில் கூடுதல் கட்டணம் வசூல்.. தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு பயன்பாட்டில் உள்ளதா?? ராமதாஸ் கேள்வி..
தனியார் பள்ளிகளில் 25% ஏழை எளிய மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்பு தமிழக அரசு ஏழை எளிய மக்களும் நல்ல கல்வி முறையை பயில வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அரசு நிதியுதவியுடன் தனியார் பள்ளிகளில் 25% வரை கல்வி பயின்று பயன் பெறலாம் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்தத் திட்டத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முறைகேடுகள் நடந்திடா வண்ணம் பார்த்துக்கொள்ளவும் அந்தந்த பள்ளிகளில் அமையப்பெற்ற இடங்களின் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலைமையில் 2012ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுக்கள் என்ன ஆனது?

அதனை தற்போது முறைகேடாக தனியார் பள்ளிகள் பயன்படுத்தி வருவதைக் கண்டு மனம் வேதனை அடைகிறது. அதோடு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளை பொறுத்தவரை சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கை கட்டணம் என்கிற பெயரிலும் சிறப்பு வகுப்புகள் என்கிற பெயரிலும் பெற்றோர்களிடமிருந்து தேவையற்ற கட்டணங்களை நவீன முறையில் வசூல் செய்து வருகிறார்கள்.
கட்டணம் வசூல் செய்யும் முறையினைப் பொருத்தவரை பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டு முறையினை ஒரு சிறிது அளவு கூட இவர்கள் பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. அந்தவகையில் சேர்க்கை கட்டணம் என்பது ரூ10,000ல் துவங்கி ரூ.25,000 வரை வசூல் செய்யப்படுகிறது. அதேபோன்று சிறப்பு வகுப்பு என்ற பெயரில் ரூ.25,000லிருந்து துவங்கி ரூ.35,000 வரை வசூல் செய்யப்படுகிறது.

பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும், மாலையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் இல்லத்திற்குச் செல்ல வேண்டும். அப்படி என்றால் 2 மணி நேரம் கூடுதலாக வகுப்பு நடத்துகிறார்கள். 6 மணி நேரத்தில் நடத்திட முடியாத பாடத்தினை 2 மணிநேரத்தில் என்ன நடத்திவிட போகிறார்கள் இவர்கள். இத்தகைய செயல் என்பது முறைகேடாக கல்வி கட்டணங்களை வசூலிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக தெளிவாக தெரிகிறது. எனவே இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


