"பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாமைக்கு பணமோசடியே காரணம்" - நீதிமன்றம் வேதனை!
சென்னை மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் 2016ஆம் ஆண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக இறக்குமதி செய்ததாக போலி ஆவணங்களைத் தயாரித்து கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணம் சுமார் 18.66 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டுக்கு விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற லியாகத் அலியை சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைதுசெய்தது.
இதையடுத்து இந்தியன் வங்கி சென்னை ஆயிரம் விளக்கு கிளையில் அவரது கணக்கிலிருந்த 1.75 கோடி ரூபாயை முடக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை 12ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருவேங்கட சீனிவாசன் முன்பாக நடந்தது. அமலாக்க துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “லியாகத் அலியிடம் முடக்கப்பட்ட 1.75 கோடி ரூபாயை அரசுடமையாக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டே அவர் இந்த பணமோசடியை செய்துள்ளார். எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இறுதி விசாரணை முடித்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லியாகத் அலி மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இந்தியாவின் நிதி நிர்வாகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாமைக்கு பணமோசடி முக்கிய காரணியாக விளங்குகிறது. அதை தடுப்பது நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் கடமை. பணம் தீயது அல்ல, ஆனால் தீய எண்ணங்களுக்கு மூல காரணம் என தேசப்பிதா காந்தியடிகள் கூறியுள்ளார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.