தருமபுரி - மொரப்பூர் திட்டம் : அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதில்!!

 
pmk

தமிழ்நாட்டில் ரூ.28,307 கோடி ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 3077 கி.மீ நீள ரயில்வே திட்டங்கள் ரூ.28,307 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு  வருவதாக மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். தருமபுரி-  மொரப்பூர் இடையே புதிய பாதை அமைக்கும் திட்டம் நிலம் கையகப்படுத்துதல் பணியால் தாமதம் ஆவதாகவும், அத்திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தி முடிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

anbumani

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று 10.12.2021  இது தொடர்பாக பா.ம.க. உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வினா எழுப்பினார். தமிழ்நாட்டில் மண்டல வாரியாகவும் வழித்தடம் வாரியாகவும், திட்டம் வாரியாகவும் நிலுவையில் பணிகள் குறித்து தொடர்வண்டி அமைச்சகம் அறியுமா? அது குறித்த விவரங்கள் என்ன? என்று  அப்போது  அன்புமணி ராமதாஸ் வினவினார். அதற்கு தொடர்வண்டித்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு:

ரயில்வே திட்டங்கள் மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து இருக்கும் என்பதால், அவற்றுக்கு மாநிலவாரியாக  அல்லாமல், ரயில்வே மண்டலம் வாரியாகத்தான் ஒதுக்கப்படுகின்றன. 01.04.2021 அன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டை உள்ளடக்கி மொத்தம் மொத்தம் 3077 கி.மீ நீளத்திற்கான 25 ரயில்வே திட்டங்கள் ரூ.28,307 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.

train

* ரூ.7910 கோடி செலவில் 871 கி.மீ நீளத்திற்கு 9 புதிய ரயில்வே பாதைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்களுக்காக  2021 மார்ச் 31-ஆம் தேதி வரை ரூ.575 கோடி செலவழிக்கப் பட்டுள்ளது.

* ரூ.5838 கோடி செலவில் 839 கி.மீ நீளத்திற்கு 4 அகலப் பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 604 கி.மீ நீள பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இந்தத் திட்டங்களுக்காக 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை ரூ.2972 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ரூ.14,559 கோடியில் 1367 கி.மீ தொலைவுக்கு 12 இரட்டைப் பாதை அமைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இவற்றில் 246 கி.மீ நீளத்திற்கான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இந்தத் திட்டங்களுக்காக  2021 மார்ச் 31&ஆம் தேதி வரை ரூ.3299 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டை உள்ளடக்கிய  பகுதிகளில் இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே ஆகியவை மேற்கொண்டு வருகின்றன.

central

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களைப் பொறுத்தவரை 2014-ஆம் ஆண்டு முதல் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்வண்டி கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2009-14 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.879 கோடி மட்டும் தான் ஒதுக்கப்பட்டது. இது 2014-19 காலத்தில் ஆண்டுக்கு ரூ.1979 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 125% அதிகம் ஆகும்.

2019-20 ஆம் ஆண்டில் இது ரூ.2410 கோடியாகவும் (174% அதிகம்), 2020-21 ஆம் ஆண்டில் இது ரூ.2812 கோடியாகவும் (220% அதிகம்) அதிகரித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 3730 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ரயில்வே பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இது தான் மிகவும் அதிகமாகும். இது 2009-14 காலத்தின் சராசரியை விட 234% அதிகம் ஆகும்.

அதுமட்டுமின்றி, 2014-21 காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 142.29 கி.மீ மொத்தம் 996 கி.மீ நீளமுள்ள தொடர்வண்டிப் பாதை பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

train

அத்துடன் தருமபுரி - மொரப்பூர் இடையிலான புதிய தொடர்வண்டிப் பாதை தாமதம் ஆவதற்கான காரணம் மத்திய அரசுக்குத் தெரியுமா? என்றும்  அன்புமணி ராமதாஸ் வினா எழுப்பினார். அதற்கு  ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு:

மொரப்பூர் - தருமபுரி இடையிலான 36 கி.மீ நீள புதிய ரயில்வே பாதைத் திட்டம் ரூ.134 கோடி மதிப்பீட்டில் 2016-17 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.359 கோடி ஆகும். 78 ஆண்டுகளுக்கு முன் குறுகிய பாதையாக இருந்த இந்தப் பாதை மூடப்பட்ட போது, பாதை அமைந்திருந்த நிலம் 1941-ஆம் ஆண்டில் மாநில அரசிடம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை மாநில அரசு தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்து விட்டது. மொத்தம் 36 கி.மீ நீள பாதையில் 28 கி.மீ பழையத் தடத்திலும் 8 கி.மீ பாதை புதிய பாதையிலும் அமைக்கப்படவுள்ளன. அதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்காக அளவீடு செய்து  தரும்படி தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருதொடர்வண்டித் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படுவது என்பது பல்வேறு காரணிகளை பொறுத்தது. அதனால், இந்தத் திட்டம் எப்போது நிறைவேற்றி முடிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்க முடியாது. ஆனால், இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றி முடிப்பதற்கு தேவையான  அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.