"50%க்கும் மேல் மக்கள் முகக்கவசம் அணிவதில்லை" - முதல்வரிடம் ஓபிஎஸ் கோரிக்கை!!

 
stalin

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்டா வைரசை விட மிக வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான் என்றும் ஏற்கனவே கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் இது தாக்கும் என்றும் இந்த பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி விட்டால் 2022ஆம் ஆண்டில் இந்த தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . ஒமிக்ரான்  வைரஸ் பரவ தொடங்கினால் மீண்டுமொரு பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

ops

முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் ,கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுதல் ஆகிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் எதார்த்தம், 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் முக கவசம் அணிவது இல்லை. இதற்கான விழிப்புணர்வு இல்லாமல்  இருப்பது கண்கூடாக தெரிகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்வதும் , தடுப்பூசி செலுத்திய வர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும்,  தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு விரைந்து செலுத்துவதும் தமிழ்நாடு அரசினுடைய கடமை.

ops stalin

எனவே தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி ஒமிக்ரான்  பரவலை வெகுவாக கட்டுப்படுத்திட ஏதுவாக ,வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நேரடியாக வருபவர்களையும், வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து, தரை வழியாகவோ அல்லது ரயில் மூலமாகவோ ,தமிழ்நாட்டிற்குள் வருபவர்களையும் பரிசோதிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் .இந்த நடவடிக்கை நாட்டு மக்களையும், நாட்டு பொருளாதாரத்தையும் பாதுகாக்க வழி வகுக்கும் " என்று குறிப்பிட்டுள்ளார்.