பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை... தருமபுரி அருகே சோகம்!

 
poison

தருமபுரி அருகே  4 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். கட்டிட தொழிலாளி. இவருக்கு அனிதா (24) என்ற மனைவியும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர். குழந்தைக்கு பிறக்கும்போதே கால்கள் சற்று பலவீனமாக இருந்துள்ளது. இதனால் தாய் அனிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். 

dharmapuri ttn

இந்த நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த அனிதா நேற்று முன்தினம் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அனிதா மற்றும் குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். 

குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, அனிதாவின் பெற்றோர் தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.