2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை! குடிக்கார கணவரால் நேர்ந்த சோகம்
ஆண்டிபட்டி அருகே தண்டியன்குளம் மலை கிராமத்தில் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதால் மனமுடைந்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பெருமாள். கூலிதொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்ததால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவிலும் மனைவியிடம் மது குடித்துவிட்டு வந்து சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயப்பெருமாளின் மனைவி தனலட்சுமி தனது இரண்டு குழந்தைகளான தேவா (7 வயது), நீதி (2 வயது) இருவரையும் கைகளில் தூக்கிக்கொண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை பார்த்த அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருசநாடு காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உயிரிழந்த மூன்று பேரில் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருக்கு ஏற்பட்ட மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் மனைவி இரண்டு குழந்தைகளோடு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


