மிசோரத்தில் மலையை குடைந்து ரூ. 8,071 கோடி செலவில் அமைக்கபட்டுள்ள ரயில் பாதை – பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

 
1 1

மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் – பைராபி நகரங்கள் இடையே 8 ஆயிரத்து 71 கோடி ரூபாய் செலவில் புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எந்த ரயில் பாதையிலும் இல்லாத வகையில் 48 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள், சாலை செல்லும் பகுதிகளில் ஐந்து மேம்பாலங்கள், ஆறு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, குராங் ஆற்றின் மீது 114 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம், நாட்டின் இரண்டாவது பெரிய பாலமாகும். பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த ரயில் வழித்தடத்தில், ஹோர்டோக்கி, கான்புய், முகல்காங், சாய்ராங் ஆகிய ரயில் நிலையங்கள் அமைந்து உள்ளன. இதன் வாயிலாக மிசோரம் மாநில தலைநகரான ஐஸ்வால் நகருக்கு எளிதாக செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிசோரமின் ஒரு பகுதியான பைராபி வரை மட்டுமே ரெயில் போக்குவரத்து இருந்து வந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து பைராபி வரையிலான இவ்வழித்தடம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம்தான் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இவ்வழித்தடத்தின் ரெயில் பாதை சுமார் 103 கிலோமீட்டர் என்ற போதிலும் அசாம் மாநில எல்லைக்குள்தான் இவ்வழித்தடத்தின் பெரும்பாலான பகுதி உள்ளது. மிக குறைந்த தூரம் மட்டுமே மிசோரம் மாநில எல்லையில் இருந்தது. இந்தியாவில் ‘குறைவான ரெயில்பாதை கொண்ட மாநிலம் மிசோரம்' என்ற பெயரும் இருந்தது.

அதைப்போக்கும் வகையில், மிசோரத்தின் பைராபி முதல் சாய்ராங் இடையே 51.38 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைத்து மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலை இணைத்து ரெயில் போக்குவரத்து பட்டியலில் அதனை கொண்டுவர 1999-ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. சாய்ராங், மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு மிக அருகில்தான் உள்ளது. ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றவுடன், அதே ஆண்டு நவம்பர் 29-ந்தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தை அமைப்பதற்கு நடைமுறையில் உள்ள சிக்கல்கள், பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி எப்படியாவது நடைமுறைக்கு கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரெயில்வே அமைச்சகம் மேற்கொண்டது.

இத்திட்டத்தின் மூலம் சாய்ராங் ரெயில்நிலையம் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.8,071 கோடி செலவில் இந்த ரெயில் பாதையை ரெயில்வேத்துறை நேர்த்தியாக வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது. இந்தப்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும். இந்த ரெயில் நிலையத்தை வரும் 13-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.