கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்கள்

 
ச் ச்

சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை மீது மர்ம நபர்கள் தார் ஊற்றிய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு போர்த்துவது, பெரியார் - அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது என்பன போன்றஅவமதிக்கும் செயல்கள் கடந்த சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சேலம், அண்ணாநகர் பூங்கா முன்பு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலை மீது சமூக விரோத சக்திகள் கருப்பு பெயிண்ட் வீசி அவமதித்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இத்தகைய செயல்களுக்குப் பின்னால் கலவர நோக்கங்கள் உள்ளனவா என்பதை காவல்துறை கண்டறிய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

இதேபோல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “தமிழக மக்களின் பேராதரவையும், பெருமதிப்பையும் பெற்றுத் திகழும் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை, அண்மையில் சேலம் மாநகரில் அண்ணா பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது. இந்த வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீசி, அவமதிக்கும் ஈனத்தனமான செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலை காவிமயமாக்கி வரும் சங் பரிவார் கும்பல் இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டு வருவதை இதுவரை நடந்த சம்பவங்களின் விசாரணை நடவடிக்கைகள் உறுதி செய்துள்ளன. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவர் சிலைக்கு காவி பூசி, பூணூல் போட்டதும், பெரியார், அண்ணல் அம்பேத்கர், எம்ஜிஆர் என மக்கள் மனதில் உயர்ந்து நிற்கும் தலைவர்களின் சிலைகளை உடைத்தும், வண்ணம் பூசியும், சுய மகிழ்வு கொள்ளும் கூட்டம் இப்போது கலைஞர் சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது தமிழ்நாட்டை பெரும் அமளிக் காடாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல் சதியின் ஒரு வடிவமாகும். கலைஞர் சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.